தோல்வித் தழும்புகளை உடலெங்கும் வாங்கியிருந்த இந்தியஅணி
இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆக்ரோஷத்தோடு ஆடியது.
தில்ஷனும் ( 160 ),சங்கக்காராவும்(105 )அடித்தஅடியில் ஒட்டுமொத்த
இந்திய அணியும் மிரண்டுபோனது. 321 ரன்களை எடுப்பதே சிரமம்.
அதுவும் 40 ஓவருக்குள்ளாக எடுத்தால்தான் போனஸ் பாயின்ட்டோடு
இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதைப் பற்றி நினைக்கலாம் என்ற
சூழ்நிலையில் தான் இந்தியஅணி பேட் செய்ய ஆரம்பித்தது. இது
கொஞ்சம்கூட சாத்தியம் இல்லாத ஒன்று என்றுதான் என்னைப் போல்
பலரும் நினைத்திருப்பார்கள்.ஆனால்,ஹோபார்ட் மைதானத்தில் மேஜிக்
நிகழ்ந்தது. சச்சினும்,சேவாக்கும் அதிரடி துவக்கம்தர, அதைவைத்து
கம்பீரும், கோஹ்லியும் ராஜபாட்டை போட்டனர். ஒருகட்டத்தில்
கோஹ்லியின் ஆட்டத்தில் ' தானே ' புயல் வேகம் தெரிய 37 ஓவர்
முடிவதற்குள் இந்தியஅணி சாதனை வெற்றி பெற்றது.கோஹ்லி 86
பந்துகளில் 133 ரன்கள் அடித்து இலங்கை அணியினரை மிரள வைத்தார்,
இந்திய ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.ஆனாலும்,சின்னதாய் ஒரு
வருத்தம் இருக்கத்தான் செய்தது.அதிக கூட்டமில்லாத ஸ்டேடியத்தில்
கை தட்டக்கூட ஆளில்லை என்பதுதான் அது. நேற்று நாம் வெற்றி
பெற்றாலும் முழுகிணறு தாண்டியதாக அர்த்தம் இல்லை.வெள்ளியன்று
நடக்கப்போகும் ஆஸ்திரேலியா,இலங்கை மேட்ச்சை வைத்துத் தான்
நாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோமா என்று தெரியும்.கடைசிவரை
டென்ஷனோடு இருப்பது நமக்கும் புதிதல்ல, நம் இந்திய அணிக்கும்
புதிதல்ல. காத்திருப்போம் நகக்கடிப்போடு.