கங்காதரனுக்கு தன் மகனின் செயல் ஆச்சரியமளிக்க அவனிடம்
கேட்டேவிட்டார்.
"ஏம்ப்பா,பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுல மாவட்டத்திலேயே
முதல் மார்க் வாங்கி பாஸாகி இருக்கே நீ .அதனால ,நெறைய தனியார் பள்ளிங்க எங்க ஸ்கூல்ல வந்து பிளஸ்டூ சேருங்க ,பீஸ்னு ஒரு பைசா கட்ட வேணாம்னு போட்டி போட்டுக்கிட்டு கூப்புடுறாங்க .நீ என்னடான்னா முன்ன படிச்ச கவர்ன்மெண்ட் ஸ்கூல்லதான் பிளஸ்டூ-வும் படிப்பேன்னு பிடிவாதமா இருக்கே. என்ன காரணம்ப்பா ? " என்றார் .
"அப்பா நீங்க ஒரு விவசாயி. நீங்க விதைச்ச விதை வளர்ந்து செடியாகி, பூத்து, காய்கிறேத்துக்கு நீர் பாய்ச்சி, களையெடுத்து, உரம் வச்சி எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்க? அது பலன்தர்ற நேரத்துல வேற யாராவது அறுவடை செஞ்சிகிட்டுப் போனா உங்க மனசு எவ்வளவு வேதனைப்படும் ? அதுமாதிரி தாம்ப்பா , இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு என்னை மாவட்டத்திலேயே முதலாவதா வர பாடுபட்ட ஆசிரியர்களையும் , ஸ்கூலையும் மறந்துட்டுப் போறதும்கூட. விதைச்சவங்களே அதோட முழுப்பலனையும் அடையணும்னுதான் நான் முன்ன படிச்ச ஸ்கூல்லயே படிக்க முடிவெடுத்தேன் ... " என்று சொல்லிக் கொண்டேபோன மகனின் பேச்சிலிருந்த அர்த்தம் கங்காதரனை பிரமிக்க வைத்தது .
No comments:
Post a Comment