Monday, December 19, 2011

ஏழு ஓட்டு ! (சிறுகதை)



திராவிடபாண்டியன் வீட்டின் முன்னால் ஒரே வெடிச்சத்தம். எம்.எல்.ஏ
தேர்தலில் அவர் வெற்றிபெற்ற சந்தோஷத்தைத்  தான் அவரது
ஆதரவாளர்கள் இப்படி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

உள்ளே திராவிடபாண்டியன் தன் தீவிர தொண்டர்களிடம்,"நாம எல்லாரும்
இப்ப அந்த வெற்றிவேலைப் பாத்து நன்றி சொல்லிட்டு வருவோம்"என்றார்.

"யாரு,உங்கள எதிர்த்து போட்டியிட்டு தேர்தல்ல  தோத்துப்போன அந்த
வெற்றிவேலையா பாக்கணும்னு சொல்றீங்க?தலைவரே, உங்களுக்கு
என்னாச்சு?ஏன் இப்டி தப்புத்தப்பா பேசுறீங்க?"என்று ஒருவன் கேட்க,


"நாம எத்தனை வோட்டு வித்தியாசத்துல ஜெயிச்சோம்கிறது மறந்து
போயிடிச்சா?வெறும் ஏழு வோட்டு வித்தியாசம்டா.தேர்தலுக்கு முன்ன
ஒரு நாள் நம்ம கட்சிக்காரங்க பிரச்சாரத்தை முடிச்சிகிட்டு ராத்திரி
பதினோரு மணிக்குமேல கார்ல வீட்டுக்கு போகும்போது அது ரோட்டோரமா
இருந்த பெரிய பள்ளத்துல விழுந்து விபத்துக்குள்ளாகி,அதுல இருந்த ஏழு
பேரும்  உயிருக்கு  போராடிக்கிட்டு  இருந்தப்ப, அந்த வழியா வந்த
வெற்றிவேல் அவங்கள தூக்கிட்டுபோய் ஹாஸ்பிட்டல்ல சேத்ததால
உயிர் பிழைச்சாங்க. அந்த ஏழுபேரும் வோட்டு போடலேன்னா  நான்
இன்னிக்கு எம்.எல்.ஏ இல்ல.அன்னிக்கு அது நம்ம கட்சிக்கொடி பறந்த
காருன்னு  தெரிஞ்சும்  மனிதாபிமானத்தோட  நம்ம  ஆதரவாளர்கள
காப்பாத்தினாரு வெற்றிவேல். அந்த நன்றியை எப்படிடா மறக்கமுடியும்?
அன்னிக்கே கந்துவட்டி,கட்டப்பஞ்சாயத்துன்னு ரௌடித்தனம் பண்ணிக்
கிட்டு இருந்த திராவிடபாண்டியன் செத்துப் போயிட்டான்டா. இப்ப புது
மனுஷனா மக்களுக்கு  தொண்டு  செய்யப்போறேன். அதோட  அந்த
வெற்றிவேல் எம்.எல்.ஏ ஆனா இந்த தொகுதிக்கு என்னென்ன நல்லகாரியம்
செய்ய ஆசைப்பட்டாரோ அதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு வந்து நான்
செய்யப்  போறேன்"என்ற திராவிடபாண்டியன் காரில் ஏறி அமர, அது வெற்றிவேல் வீட்டை நோக்கி சீறிப் பாய்ந்தது.

       
         

Sunday, December 11, 2011

பாரதி நினைவலைகள்


டிசம்பர்-11 பாரதியார் பிறந்தநாள்.எத்தனை பேருக்கு இது ஞாபகமிருக்கும்
என்று தெரியவில்லை! நடிகர்களின் பிறந்தநாளை  ஞாபகம்  வைத்துக்
கொள்ளுமளவுக்கு ஒரு மகாகவிஞனின் பிறந்தநாள் தெரியாமல் போனது
வேதனையான விஷயம்.

      "காலா  உனை  நான்  சிறு   புல்லென மதிக்கிறேன்! - என்றன்   
      காலருகே  வாடா, சற்றே  உனை  மிதிக்கிறேன். "

என்று எமனைப் பார்த்து பாடியவர் வாழ்ந்ததோ 39 வருடங்கள் மட்டுமே.
ஆனால்,அவர் கவிதைகள் 39 யுகங்களை தாண்டியும் நிற்கும்,பேசப்படும்.


முரட்டு மீசை,தலைப்பாகை என்று அவர் முகத்தில் இருக்கும் கம்பீரம்
அவர் கவிதைகளிலும் இருக்கும்.

பாரதி ஒரு தீர்க்கதரிசி.அதனால்தான் நாடு விடுதலையாகும் முன்பே

      "ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
       ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் "

என்று பாடினார்.

பாரதி ஒரு புதுமை விரும்பி. அதனால்தான்  எல்லோரும்  தாய்நாடு,
தாய்நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது

      "தந்தையர்  நாடென்ற பேச்சினிலே - ஒரு
       சக்தி பிறக்குது மூச்சினிலே "

என்று பாடினார்.

பாரதி ஒரு பெண் சுதந்திர விரும்பி . அதனால்தான்

      "எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
       இளைப்பில்லை காணென்று கும்மியடி " என்றும்

      "கற்பு நிலையென்று சொல்லவந்தார், இரு
       கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் "

என்றும் பாடினார்.

      "தனியொருவனுக்  குணவிலையெனில்
       ஜகத்தினை அழித்திடுவோம் "

என்று பாடிய பாரதியின் வாழ்க்கையில் பெரும்பகுதி பசியும்,வறுமையும்
கலந்தே இருந்தது.

வாழும்காலத்தில் அவரை அங்கீகரிக்கவும்,அரவணைக்கவும் தவறிவிட்டது
தமிழ்ச் சமுதாயம். அந்தக்  கோபம்  தமிழ்த்தாய்க்கு  இன்னும்  இருக்கும்
என்பதில் சந்தேகமில்லை.             

Saturday, December 10, 2011

ஆத்மாவின் அலறல் ! (சிறுகதை)



நாராயணசாமி  ஊரறிந்த  சமூகசேகவர். அவர்  திடீரென்று  ஹார்ட்
அட்டாக்கில்  இறந்துபோக, அவருக்கு  இறுதிமரியாதை  செலுத்த
சொந்த ஊரிலிருந்து மட்டுமில்லாமல் அக்கம்,பக்க ஊரிலிருந்தும்
நிறையபேர் திரண்டிருந்தனர்.

அதில் ஒருவர், "நாராயணசாமி மனுஷங்ககிட்ட மட்டுமில்ல,வாயில்லா
ஜீவன்கள்கிட்டயும் அன்பு காட்டினவர். ஆறுமாசம் முன்ன  ஒரு குதிரை
அடிபட்டு,ஒடம்பெல்லாம் காயத்தோட உயிருக்கு போராடிகிட்டு நம்ம
ஊருக்குள்ள  எப்படியோ வந்தப்ப நாம யாரும் அத கண்டுக்கல. அப்ப
நாராயணசாமி தான் டவுன்ல இருந்து வெட்னரி டாக்டரை கூட்டிவந்து
வைத்தியம் பாத்து குதிரைய பொழைக்க வெச்சார்" என்றார்.

"சமூகசேவைக்காக கல்யாணமே செஞ்சுக்காதவர்.இப்பக்கூட பாருங்க
கண்களையும் தானம் பண்ணியிருக்கார்"என்று இன்னொருவர் புகழ,

"சரி,சரி பொழுது போயிட்டிருக்கு.பாடிய எடுத்துடலாம்"என்று ஊர்த்
தலைவர் சொல்ல,

"தலைவரே,நாராயணசாமி செத்திருக்கிறது சனிக்கிழமை.சனிப்பொணம்
தனியா போவாது,துணை கேக்கும்னு சொல்வாங்க.அதனால, அவர்
பாடியோட ஒரு கோழிக்குஞ்சை கொன்னு பொதைச்சுடலாம்" என்று
மாரியம்மன் கோயில் பூசாரி சொல்ல,தலைவரோடு ஊரும் ஏற்றுக்
கொண்டது.

நாராயணசாமியின் உடல் மயானக்குழிக்குள் இறக்கப்பட்டு,கோழிக்குஞ்சு
ஒன்றையும் அறுத்து அதே குழியில் போட்டபோது,"பாவிகளா! என்னை
ரெண்டாவது முறையா சாகடிச்சுட்டீங்களே"என்று நாராயணசாமியின்
ஆத்மா அலறியது யாருக்கும் கேட்கவேயில்லை!
                      

Friday, December 9, 2011

கிரிக்கெட் (IND V WI)



சேவாக்கைப் பற்றி என்ன சொல்ல? டெஸ்ட் மேட்சைக்கூட ஒருதினப்
போட்டி போல ஆடும் சேவாக், நேற்று ஒருதினப் போட்டியை 20 ஓவர்
கிரிக்கெட் போல ஆடி வானவேடிக்கை  நடத்திவிட்டார். நேற்றைய
போட்டியை லைவ்வாக பார்த்தவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.சேவாக்
25 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடித்ததை ரசிகர்கள் மட்டுமல்ல,
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களும்  வேடிக்கை மட்டுமே  பார்க்க
முடிந்தது.எதையும் தடுக்க முடியவில்லை.
Virender Sehwag celebrates his record-breaking double-hundred

சச்சின் 147 பந்துகளில் 200 அடித்தாரென்றால்,சேவாக் 140 பந்துகளில் 200
அடித்து சாதனையை மாற்றி எழுதியுள்ளார்.ஒரு இந்தியனின் சாதனையை
ஒரு இந்தியனே  உடைத்ததை  நினைத்து, ஒரு இந்தியனாய்  பெருமை
கொள்கிறேன்,கர்வம் கொள்கிறேன்.சச்சின் 200 அடித்தது குவாலியரில்.
சேவாக் 219 அடித்தது இந்தூரில்.இரண்டும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள
மைதானங்கள்.இந்த ஒற்றுமையில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றே
தோன்றுகிறது. ஏனெனில்  சேவாக்,சச்சினை குருவாக மதிப்பவர். குரு
வழியில்  சென்றே சாதனை   படைத்திருக்கிறார். இதேபோல்  இன்னும்  நிறைய சாதனைகளை குருவும்,சிஷ்யனும்  படைக்க வேண்டும் என்பதே 
என் போன்ற ரசிகர்களின் ஆசை,கனவு எல்லாம்.            

Sunday, December 4, 2011

பார்த்ததில் பிடித்தது



ஜெயா டிவி-யில் விசுவின் " மக்கள் அரங்கம் " பார்த்தேன். அதில் இரண்டு
நிகழ்ச்சிகள் என்னை நெகிழவும்,மகிழவும் வைத்தது.

ஒன்று - பெங்களூரில் இருக்கும் "உன்னத்தி ( UNNATI )" என்ற தொண்டு
அமைப்பு. இது  வறுமைக்கோட்டில் வாழும் ஏழைகளுக்கு ஒன்பது 
வகையான வேலைவாய்ப்பு பயிற்சிகளை முற்றிலும் இலவசமாக
வழங்கி, தக்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பும் வாங்கித் தருகிறது .
வெளியூர்காரர்களாக இருந்தால் உணவு ,இருப்பிடம் ஆகியவற்றையும்
இலவசமாக தருகிறது.எல்லா ட்ரெய்னிங் கோர்ஸ்களும் 70 நாட்கள்
தான்.இதில் பயன் பெற்றவர்கள் பேட்டியும் ஒளிபரப்பாகியது.LKG,UKG
போன்றவற்றிற்கே லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டிய இந்த
காலத்தில் 'உன்னத்தி' செய்யும் தொண்டு உன்னதமானது.அது இருக்கும்
திசைநோக்கி கைகூப்பி வணங்கினாலும் தவறில்லை.

உன்னத்தி மூலம் பயன்பெற விரும்புபவர்கள்
http://unnatiblr.org
போய் பாருங்கள்.

இரண்டாவது - 90 வயது பெண்மணி நடத்தும் அனாதைஇல்லம்.அந்தப்
பெண்மணியின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் நல்லவேலையில்
இருக்கிறார்கள்.அவர் நினைத்திருந்தால் ஏதாவது ஒரு மகனோடு வெளி
நாட்டில் செட்டிலாகி இருக்கலாம்.ஆனால்,அவர் 60 அனாதைக் குழந்தை
களையும்,கொஞ்சம் முதியவர்களையும் அன்போடு அரவணைத்து பாது
காத்து  வருகிறார் . 90 வயதிலும்  தளராத  நம்பிக்கையோடு  சேவை
செய்யும் அந்தப் பெண்மணியை நினைக்கும்போது மனிதநேயம் அறவே
அழிந்துவிடவில்லை.அது இந்தமாதிரி மனிதர்களால் இன்னும் சாகாமல்
தான் இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. விசு சார் படம் எடுத்த
காலத்தில் பெற்ற பேர்,புகழைவிட"அரட்டை அரங்கம் " "மக்கள் அரங்கம் "
மூலம் செய்த,செய்யும் சமூகத்தொண்டால் கிடைக்கும் பேர், புகழ்
புனிதமானது, ஆத்மார்த்தமானது.வளரட்டும் அவர் சமூகத்தொண்டு.      


                    

Saturday, December 3, 2011

காதல் கிறுக்கல்கள் !



உன் உதடுகள்
உச்சரித்து,உச்சரித்தே
தமிழ்மொழி
செம்மொழியாகி விட்டதடி !


கவிதை ஒன்றை எழுதிவாருங்கள்
என்றார் ஆசிரியர்.
கவிதை ஒன்றைப் பாருங்கள்
என்றேன் நான்
உன்னைக் கூட்டிப்போய் !


ஹிந்தி படிக்கச்சொன்ன
அப்பாவிடம்
அந்நியமொழி கற்க
ஆர்வமில்லை என்றேன்.
உன் உதடுகள்
உச்சரிக்காத மொழி
எனக்கு
அந்நியமொழி தானே!


உன் கையெழுத்துபோல்
என் தலையெழுத்தையும்
அழகாக்கிவிடு
காதல் மைகொண்டு !


என் கவிதையெல்லாம்
கிறுக்கலாய்  இருந்தது 
உன்னைப்  பார்க்காதவரை .
என் கிறுக்கல்கள்கூட 
கவிதையானது 
உன்னைப்  பார்த்தபின்பு.


கவிதை எழுத
சொல்லித்தருவாயா
என்றாய்!
என்னால் முடியாதென்று
தீர்மானமாய் மறுத்தேன்.
கவிதைக்கே
கவிதை சொல்லித்தரும்
வித்தை நான் இன்னும்
கற்கவில்லையடி !
   


  



     

Tuesday, November 29, 2011

கிரிக்கெட் ( IND v WI )


Sachin Tendulkar was dismissed for 3

மும்பை கிரிக்கெட் டெஸ்ட்  இறுதி ஓவர் வரை மட்டுமல்ல, இறுதி
பால்வரை பரபரப்பாய் நடந்து முடிந்திருக்கிறது.கைக்கெட்டிய தூரத்தில்
வெற்றி இருந்தும் அதை கோட்டைவிட்டது நம் இந்திய அணி.கொஞ்சம்
திமிர்,கொஞ்சம் அலட்சியம் எல்லாம் தான் இதற்குக் காரணம் என்று நான்
நினைக்கிறேன். சேவாக் ஆரம்பித்து கொடுத்த நல்ல தொடக்கத்தை
பயன்படுத்தி பத்துஓவர் மிச்சம் இருக்கும்போதே முடித்திருக்கவேண்டிய
மேட்சை வீணடித்துவிட்டார்கள் மிடில்வரிசை ஆட்டக்காரர்கள். 3-0
என்று தொடரை வென்று இருந்தால் ஐசிசி தர வரிசையில் முன்னேற
இன்னும் கொஞ்சம் அதிக புள்ளிகள் கிடைத்திருக்கும்.இப்போது அதுவும்
போச்சு.மற்றபடி எதிர்பார்த்த சச்சின் சதம் அடிக்காமல் எதிர்பாராத
அஸ்வின் சதமடித்து அசத்தினார்.90-களின் துரதிஷ்டம் துரத்த சச்சின்
மீண்டும் 94-ல் அவுட்.மும்பை ரசிகர்களின் இதயமும் அதோடு அவுட்.
இனி அவர் செஞ்சுரி அடிக்க ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வரை
காத்திருக்கத்தான் வேண்டும் ,வேறு வழியில்லை.          



Thursday, November 24, 2011

எட்டாவது அதிசயம்! (சிறுகதை)


அது கேசவன் தானே!ஏன் என்னைப் பார்த்து அந்த சலூனுக்குள் ஒளிகிறான்? வியப்பாக இருந்தது எனக்கு.

நான் கொஞ்சம் லொட,லொடவென்று பேசும் டைப். அதற்குப் பயந்து ஒளிகிறானா?அல்லது LIC பாலிசி போடச் சொல்லி ரொம்ப நாட்களாக
வற்புறுத்தி வருகிறேன். அதற்குப் பயந்து பதுங்குகிறானா? அவனிடமே
கேட்டு விடுவது என்ற முடிவோடு போனேன்.

"ஏன்டா  என்னைப் பாத்து  ஒளியறே? பாலிசிக்குப் பயந்தா?" என்றேன்
காட்டமாய்.

"அடப்பாவி , நான் ஒளிஞ்சது  வேற  ஒரு  காரணத்துக்காகடா. உனக்குப்
பக்கத்துல நின்னுகிட்டிருந்தவர் என்னோட பழைய முதலாளிடா.அவருக்கு
தொழில்ல பெருத்த நஷ்டம். அங்க வேலை பாத்த தொழிலாளிகளுக்கு
 ரெண்டுமாதச் சம்பளபாக்கி இருக்கு என்னையும் சேத்து.ஒரு மாசம்
முன்ன அவரைப் பாத்தப்ப,சம்பள பாக்கிக்காக தொழிலாளிகளைப் பாத்தா
ஓடி ஒளிஞ்சுக்க வேண்டி இருக்கு. ரொம்ப கொடுமைப்பா இதெல்லாம்னு
வருத்தப்பட்டுச்  சொன்னார். இந்தமுறை அவரு என்னைப்பாத்து
ஒளியிறதுக்குள்ள நானா ஒளிஞ்சுக்கிட்டேன் .என்னால அவருக்கு
செய்ய முடிஞ்ச உதவி இதான்"என்றான் கேசவன்.

கேசவன் எட்டாவது அதிசயமாய் எனக்குத் தெரிந்தான் இப்போது.


(குமுதம் இதழில் வந்த சிறுகதை இது.)
     

Tuesday, November 22, 2011

பிடிச்சிருக்கா? (சிறுகதை)


"நட்சத்திரா...நட்சத்திரா..."என்று என்னைக் கூப்பிட்டுக்கொண்டே அப்பா,
அம்மா இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

"என்னப்பா ?" என்று நான் கேட்க,

"அடுத்த வாரம் நடக்கப்போற உன் கல்யாணத்துக்காகப் பட்டுப்புடவை,
நகைகள் எல்லாம் வாங்கி வந்துருக்கோம்.பாத்து சொல்லுமா எப்படி
இருக்குன்னு?"

"நட்சத்திரா,உனக்குப் பிடிச்ச மெரூன்கலர்லயே பட்டுப்புடவை எடுத்து
வந்திருக்கோம்.விலை ஒருலட்ச ரூபா. பிடிச்சிருக்கா?"

"இந்த வைர நெக்லஸை பாரும்மா.லேட்டஸ்ட் டிசைனாம்.உனக்குன்னே
செஞ்ச மாதிரி இருக்கு."

"இது புது மாடல் லேடீஸ் வாட்ச்.இருபதாயிரம் ரூபா.பிடிச்சிருக்காம்மா?"

"இது நீ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்த தங்க கொலுசு.பிடிச்சிருக்கா பாரு.
இல்லேன்னா மாத்திக்கலாம்."

"இப்படிப் பிடிச்சிருக்கா,பிடிச்சிருக்கா என்று கேட்ட அப்பா,அம்மா பதினேழு
வயசு வித்தியாசமுள்ள மாமா பையனை கல்யாணம் பண்ணிக்க உனக்குப்
 பிடிச்சிருக்கா?  என்று  மட்டும்  கடைசிவரை  என்னிடம் கேட்கவே
இல்லை.


(குமுதம் இதழில் முத்திரைக் கதை அந்தஸ்த்தோடு வந்தது இது.)         

Wednesday, November 16, 2011

பெட்ரோல் அரசியல்!


பெட்ரோல் விலைகுறைப்பு பொதுமக்களுக்கு சந்தோஷம் தரும்
விஷயம் என்றாலும்,அதன் பின்னால் இருக்கும் அரசியலை கூர்ந்து
நோக்கினால் தான் தெரியும்.இந்த விலைகுறைப்பு மம்தாபானர்ஜியின்
மிரட்டலுக்குப் பயந்தா?அல்லது,  நான்கைந்து  மாதத்தில்  வரப்போகும்
உத்திரப்பிரதேச தேர்தலை மனதில் வைத்தா என்பது மன்மோகன் அரசுக்கே
வெளிச்சம். இவர்களின்அரசியல் ஆட்டத்துக்கு மக்களை பகடை காய்களாக
பயன்படுத்துவது  எந்தவிதத்தில்  நியாயம் ? மக்கள்  அத்தியாவசியப்
பொருட்களை வாங்கும் சக்தியை மட்டுமல்ல,இதையெல்லாம் எதிர்த்து
போராடும் சக்தியையும் இழந்து விட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை.
நம்முடைய இந்த மனோபாவம் தான் அரசியல்வாதிகளுக்கு எதையும்
செய்யும் துணிச்சலை கொடுக்கிறது.போராட்டகளம் தயாராய்த் தான்
இருக்கிறது.போராடத்தான் மக்கள் இல்லை!         

Monday, November 14, 2011

சுதந்திர வலி! (சிறுகதை)


அன்று சுதந்திர தினம்.அந்த பள்ளிக்கூடத்தின் தேசியக்கொடியை ஏற்றி
வைக்க சிறப்பு விருந்தினராக அந்த பகுதியைச் சேர்ந்த பெண் விடுதலைப்
போராட்ட தியாகி ஈஸ்வரியை அழைத்திருந்தனர்.கொடியை ஏற்றி வைத்து
விட்டு பேச ஆரம்பித்தார் ஈஸ்வரி.

"நம்மநாடு  சுதந்திரமடைஞ்சு 65 வருஷம்  ஆகுது . இந்த 65 வருஷத்துல
நாம அறிவியல்,மருத்துவம்,தொலைத்தொடர்பு துறைன்னு பல துறையில
முன்னேறி இருக்கோம்.ரொம்ப பெருமையாத் தான் இருக்கு.ஆனா,இந்த
நாட்டு  விடுதலைக்காக  பாடுபட்ட  தியாகிகளோட  வாழ்க்கை  எப்படி
இருக்குன்னு பாத்தா கொஞ்சம் அவலமாத்தான் இருக்கு.என்னையே
எடுத்துக்கோங்க,நா நேதாஜியோட இந்திய தேசிய ராணுவத்துல
சேந்து,பர்மாவுல நடந்த பயிற்சியில எல்லாம் கலந்துகிட்டு நாட்டோட
விடுதலைக்காக போராடினவ தான்.கல்யாணம்,காட்சியெல்லாம்கூட
வேண்டாம்னுட்டு நிறைய போராட்டத்துல கலந்துகிட்டேன்.நாடும்
விடுதலையாச்சு.அப்புறம், உடம்புல தெம்பு  இருக்கிறவரைக்கும்
உழைச்சு பிழைச்சி வாழ்க்கையை ஓட்டிட்டேன்.இப்ப எனக்கு 88
வயசாகுது. எந்த வேலையும் செய்ய முடியல. பசி வந்திட பத்தும்
பறக்கும்பாங்க.அந்த பசியை வெல்ல தியாகிங்க பென்ஷனுக்கு  மனு
கொடுக்க போனா,"நீ எந்த போராட்டத்துல கலந்துகிட்ட?எத்தனை தடவ
ஜெயிலுக்கு போயிருக்க? அதுக்கெல்லாம் ஆதாரம்  இருக்கான்னு
கேக்குறாங்க! நாட்டுக்காக பாடுபட்ட நா எந்த ஆதாரமும் வச்சுக்கல.
ஆதாரம் இல்லன்னா பென்ஷன் இல்லன்னு சொல்லிட்டாங்க.

நாடு அடிமைப்பட்டு கிடந்தப்ப நாங்க போராடி மீட்டோம். இப்ப நாங்க
வறுமையில அடிபட்டு கிடக்குறப்ப மீட்க வேண்டியது இந்த நாட்டோட
கடமையில்லையா? இந்த கொடி ஏத்துற நிகழ்ச்சியில கலந்துக்ககூட
எங்கிட்ட ஒரு நல்ல புடவை இல்ல.கட்டியிருக்கிற இந்த புடவையை
அவுத்தா ஆயிரம் ஒட்டுகளும்,கிழிசல்களும் தெரியும்"என்று ஈஸ்வரி
கண்கலங்க,பள்ளியில் இருந்தவர்கள் மட்டுமல்ல,கம்பீரமாய் பறந்து
கொண்டிருந்த  தேசியக்கொடியும்  தலைகவிழ்ந்து  தன்  துக்கத்தை
வெளிப்படுத்தியது.  

  
                            
       

Friday, November 11, 2011

சினிமாக்காரன் கனவு ! (சிறுகதை)


சினிமா இயக்குனர் சுதந்திரராஜாவுக்கு தேசியவிருது அறிவிக்கப்பட்ட
செய்திகேட்டு அவரை பேட்டிகாண பத்திரிக்கை நிருபர் கூட்டம் அவரின்
அலுவலகத்தை மொய்த்தது.

சுதந்திரராஜாவை நோக்கி சரமாரியாய்  கேள்விக்கணைகளை  வீசவும்
ஆரம்பித்தனர்.

"தேசிய விருதுக்கான இயக்குனரா உங்களை தேர்ந்தெடுக்கப்பட்டதைக்
கேள்விப்பட்டபோது, எப்படி இருந்தது உங்க மனநிலை?"

"எல்லார் மாதிரியும் பரவசப்பட்டேன், சந்தோசப்பட்டேன்."

"உங்களின் முதல் படத்திற்கே தேசியவிருது கிடைத்திருக்கிறது. இதை
எதிர்பார்த்தீர்களா?"

"விருதுக்கான  எல்லா  தகுதிகளும்  என்  படத்திற்கு  இருந்ததாகவே
நினைக்கிறேன்."

"உங்க பேச்சுலதான் சந்தோசம் இருக்கு. ஆனா, உங்க முகத்துல  ஏதோ
வருத்தம்  இருக்கிறமாதிரி  தெரியுது."

"நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி.நா இந்த சினிமா ஃபீல்டுக்கு வந்தப்ப
எனக்கு ஒரு கனவு இருந்துச்சு.அது,நாஒரு படம் டைரக்ட் பண்ணனும்,
அது என் கிராமத்து தியேட்டர்ல ஓடணும், எம் மக்களோட அந்தப்
படத்தை நா பார்க்கணும்னு.புதுப்படம் என் கிராமத்துக்கு வர எப்பவும்
கொஞ்சம் லேட்டாகும்.என் படமும் அங்க போடறத்துக்குள்ள, இருந்த
ஒரே  தியேட்டரையும்  நேத்துதான்  இடிச்சாங்களாம். கொஞ்சநாளா
நஷ்டத்துல ஓடினதால  எடுத்த  முடிவாம். அதான்,  விருது  கிடைச்ச
சந்தோசத்தைவிட,தியேட்டர் இடிச்ச துக்கம் என்னை வதைக்குது."என்று
சுதந்திரராஜா  லேசாய்  கண்கலங்க, நிருபர் கூட்டம் அதிர்ச்சியில்
உறைந்தது.

                  

கிரிக்கெட்


இங்கிலாந்தில் பட்ட அவமானக்கறையை துடைக்க மேற்கு இந்தியதீவுகள்
அணியுடனான மோதலை பயன்படுத்திக் கொள்ள  ஆரம்பித்துவிட்டது  நம்
இந்திய அணி. அதன் முதல்கட்டமே, முதல் டெஸ்ட்டின் வெற்றி. அறிமுக
வீரர்  அஸ்வின்  9  விக்கெட்களை  வீழ்த்தி  தன்  தேர்வை  நியாயப்படுத்தி
இருக்கிறார். மேற்கு இந்தியதீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் லீடை
சரிவர பயன்படுத்திக் கொள்ள தவறியதே அதன் தோல்விக்குக் காரணம்.
சச்சின் 100வது சதம் அடிக்காமல் வழக்கம்போல ஏமாற்றினார்.இருந்தாலும்
15000 ரன்கள் என்ற சாதனையை படைத்து ஆறுதல்பரிசு அளித்திருக்கிறார்  நம்  எல்லோருக்கும். அடுத்துவரும்  டெஸ்ட்டிலாவது அவர்  வரலாற்று 
சாதனை படைப்பார் என்று நம்புவோம்.     
           

Friday, November 4, 2011

நண்பா ! நண்பா ! (சிறுகதை)


"இப்படி ஒரு மலைக்கிராமத்திலா என் நண்பன் நகுலன் ஆசிரியராக
பணிபுரிகிறான்! பள்ளியில் படிக்கும்போதே ஏதாவது சாதிக்கவேண்டும்,
சாதிக்கவேண்டும்  என்று  சதா  சொல்லிக்கொண்டிருப்பானே ! நவீன 
வசதிகளின் சுவடுகள் கொஞ்சம்கூட இல்லாத இந்த ரிமோட் வில்லேஜில்
இருந்து  கொண்டு  என்ன  பெருசாக சாதித்து விடப்போகிறான்? சராசரி  
வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருப்பான் !என்ற எண்ணத்தோடு அவன் 
வீட்டை நெருங்கினேன்.

வீடு பூட்டியிருக்க ,இன்று ஞாயிற்றுக்கிழமை எங்கே போயிருப்பான்?என்ற 
எண்ணத்தோடு பக்கத்து வீட்டிலிருந்த கிழவியிடம் கேட்க ,"ஊரே ஸ்கூல்ல
தாம்பா இருக்கும், அங்க போய்ப்பாரு "என்றாள்.

நான் ஒன்றும் புரியாமல் ஸ்கூல் நோக்கி நடந்தேன்.கிழவி சொன்னது 
உண்மை தான்.ஊர் மக்கள் எல்லோரும் ஸ்கூலில் கூடியிருக்க ,அங்கே
ஒருவர் மேடையில் மருத்துவம் சம்மந்தமான குறிப்புகள் கொடுத்துக் 
கொண்டிருந்தார் .என்ன இங்கே நடக்கிறது என்பதை நான் முழுசாக 
உணர்வதற்குள் என் தோள் மீது ஒரு கை விழ , திரும்பிப்பார்த்தேன் .
நகுலன் நின்று கொண்டிருந்தான் .

"என்ன நகுலா இதெல்லாம் ?"என்றேன்.

"இது மலையில இருக்கிற  குக்கிராமம்டா .அதனால இங்க சேவை
செய்ய எந்த டாக்டரும் ஆர்வம் காட்டுறதில்ல .அதுக்காக நோய் வராம
இருக்குமா என்ன ?காய்ச்சல் ,தலைவலி ,கைகால் வலி, ரத்தக்காயம்  
இதுக்கெல்லாம் செய்ய வேண்டிய முதலுதவி பத்தி மக்களே தெரிஞ்சுக்
கிட்டா,அவசரத்துக்கு அவுங்களே வைத்தியம் செஞ்சுக்கலாமில்ல.அதுக்குத்
தான் என் டாக்டர் நண்பன் ஒருவரை வரவழைச்சு மருத்துவ விளக்கம்
கொடுக்கச் சொன்னேன்.அதோட ரத்ததானம்,கண்தானம் பத்தியும் 
இந்த மக்கள்கிட்ட எடுத்துச் சொல்லி அம்பது பேரை கண்தானம் பண்ணவும்
நிறைய பேரை ரத்ததானம் தரவும் ரெடி பண்ணி வச்சிருக்கோம்.ஏதோ
நம்மால முடிஞ்சது இந்த சமுதாயத்துக்கு! " என்றான்.

"நகுலா,நீ சாதிச்சுக்கிட்டுதான்டா இருக்கே "மனதுக்குள் சொல்லி,சொல்லி
சந்தோசப்பட்டுக்கொண்டேன். 
                       


   
             

Wednesday, November 2, 2011

தேவையா இது?


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனை
ஆக்குவதென்பது முழுக்க,முழுக்க அரசியல் உள்நோக்கம் உடையது.
முந்தைய திமுக அரசு கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக
கண்ணை  மூடிக்கொண்டு  எதிர்ப்பது  இன்றைய  ஆட்சியாளர்களுக்கு
நல்லதல்ல.இன்னும் இவர்கள் பக்குவப்படவில்லை என்பதையே இந்த 
செயல் காட்டுகிறது.மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிக்கவா ஆட்சி 
மாற்றத்தை கொண்டு வந்தார்கள் மக்கள் !அவர்கள் எல்லாவற்றையும் 
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேவைப்படும்போது பொங்கி 
எழவும் தயங்கமாட்டார்கள் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் ஞாபகத்தில் 
வைத்துக்கொள்வது நல்லது.            

ஹைக்கூ கவிதைகள்


எரிந்த வீட்டில்    
சந்தோசமாய்  சிலர் 
சிவப்பு விளக்கு !


அழிக்க முற்பட்டாலும் 
வளர்ந்துகொண்டே போகிறது
வறுமைக்கோடு.


ஆங்கிலத்தில் மழை
தமிழில் தூறல் 
கான்வென்ட் பிள்ளைகள்.

ஆகஸ்ட் - 15 , ஜனவரி -26
இரண்டும் அவமானத்தில் 
டிசம்பர்-6 


காலையில் பூக்கள்
மாலையில் காம்புகள்
பள்ளிக் குழந்தைகள் ! 
 
   

Monday, October 31, 2011

2011 -ல் ஓர் பர்த்டே (சிறுகதை)

செல்போன் இடைவிடாமல் சிணுங்க,எரிச்சலோடு எடுத்த அஸ்வின்,"நான் 
ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன்.உனக்கு போன் பண்ண நேரம் 
காலமே கிடையாதா ஸ்வேதா?"என்றான்.

"ஆறு மாசத்துலயே புதுப்பொண்டாட்டி நான் உனக்கு கசந்துட்டேனா!இவ்வளவு சலிப்பா பேசுறே!"

"ஸாரி ஸ்வேதா.என்ன விஷயம்,பட்னு சொல்லு?"

"நாளைக்கு என் பர்த்டே.ஒருநாள் லீவ் போட்டு வர்றியா! கோயில், பீச்           
மாயாஜால்னு என்ஜாய் பண்ணிட்டு வரலாம்.ஒரு மாசமா இன்டர்நெட்,
SMS, போன்னு பேசிப்பேசி போரடிக்குது அஸ்வின். உன்னை ஒருமுறை 
நேர்ல பார்க்க  ஆசையா இருக்கு."

"லீவா!அது ரொம்ப கஷ்டம் ஸ்வேதா.யு எஸ் ப்ராஜெக்ட் ஒண்ணு இன்னும் 
ஒருவாரத்துல முடிக்கவேண்டி இருக்கு.அதுக்காக ராத்திரி பகல்னு பாக்காம
உழைச்சிகிட்டிருக்கோம்.டீம்லீடரா இருந்துகிட்டு நானே பொறுப்பில்லாம
நடந்துக்க முடியுமா?"என்று அஸ்வின் சொல்ல,கோபத்தில் போனை கட்
செய்தாள் ஸ்வேதா.

இரவு பனிரெண்டு மணிக்கு காலிங்பெல் அழைக்க, ஸ்வேதா கதவைத்
திறக்க வெளியே நின்றிருந்த அஸ்வின்,"ஹேப்பி பர்த்டே மை டார்லிங்"
என்றவன் கையிலிருந்த சின்ன கிஃப்ட்டை கொடுத்துவிட்டு," ஸாரிடா
ஸ்வேதா குட்டி அடுத்த பிறந்தநாளை க்ராண்டா கொண்டாடலாம்.நான் 
திரும்ப ஆஃபீஸ் போயாகணும்"என்று கிளம்ப ,

"என்ன லைஃப் இது அஸ்வின்?ஒரே வீட்ல இருந்தும் ஒரு மாசமா ரெண்டு  
பேரும் பாத்துக்கமுடியல!நீ என்னடான்னா   உன் கம்பெனி,ப்ராஜெக்ட்,
வெளிநாடுன்னு ஓடறே.நான் கால்சென்டரை கட்டிண்டு அழறேன்.இன்னும்
கொஞ்சநாள்ல ஒரே  வீட்ல இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க
பாஸ்போர்ட் ,விசா எல்லாம்கூட தேவைப்படுமோ என்னவோ !"என்று
ஸ்வேதா ஆதங்கப்பட ,அதிலிருந்த உண்மை ஓங்கி சம்மட்டியால் அடித்தது 
போல சுள்ளென்று வலித்தது அஸ்வினுக்கு .     

                          

Saturday, October 29, 2011

நல்லதை விதை ! (சிறுகதை)

வீட்டுக்குள் நுழைந்த கீதா கணவன் இளமாறனிடம்,"நம்ம பையன் பண்ணின காரியத்தால இன்னிக்கு எம் மானமே போச்சுங்க!"என்று புலம்பினாள்.

"அப்படி என்ன செஞ்சான்?" என்று இளமாறன் கேட்க,

"சென்னையில இருந்து சேலத்துக்கு பஸ்ல வந்துகிட்டிருந்தோம்.கண்டக்டர்
நம்ம பையனுக்கு முழுடிக்கெட் எடுக்கணும்னு சொன்னாரு.இவனுக்கு
12 வயசுதான் ஆகுது.அதனால அரைடிக்கெட் கொடுங்கன்னு கேட்டேன்.
அதுக்குள்ளே இவன் முந்திகிட்டு எனக்கு 13வயசு ஆகுதுன்னு சொல்ல
கண்டக்டர் உட்பட எல்லாரும் என்னை ஒருமாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க
அப்புறம் வேற வழியில்லாம முழுடிக்கெட் எடுத்ததுல 150 ரூபா தெண்டம்.
இவனை கொஞ்சம் கண்டியுங்க " என்று கீதா கூற,

"அம்மா சொல்றதெல்லாம் நிஜமாப்பா?"பையனிடம் இளமாறன் கேட்க,

"ஆமாம்பா,நீங்கதானே பொய் சொல்லக்கூடாது,எப்பவும் உண்மையே
பேசணும்னு சொல்வீங்க.அதத்தான் இன்னிக்கு செஞ்சேன்.நா செஞ்சது
தப்பாப்பா?"என்றான்.

"இல்லப்பா,நீ செஞ்சதுதான் ரொம்பச் சரி.கீப் இட் அப்"என்று மகன்
முதுகில் தட்டிக்கொடுக்க ,

"என்னங்க நீங்க ,அவனை கண்டிப்பீங்கன்னு பாத்தா  முதுகுல தட்டிக்
கொடுக்குறீங்களே!"கீதா கோபிக்க ,

"தப்பு கீதா, தப்பு.இன்னிக்கு இந்த 150  ரூபாய்க்காக அவனை பொய்
சொல்லச் சொன்னா,நமக்கு ஆதாயம் கிடைக்கும்னா பொய் சொல்றது
தப்பில்லைங்கிற எண்ணம் அவன் அடிமனசுல ஆழமா பதிஞ்சுடும்.
இந்த லாபம் பாக்குற புத்திதான் பின்னால லஞ்சம்,ஊழல்கூட 
தனக்காக செஞ்சா தப்பில்லைன்னு நினைக்க வைக்கும்.இந்த வயசுல 
அவன் மனசுங்கறது சீர்படுத்தப்பட்ட அழகான விளைநிலம் மாதிரி.இதுல
நல்லத விதைச்சோம்னா,நல்லதையே அறுவடை செய்யலாம்.அதனால 
தான் அவனை தட்டிக் கொடுத்தேன்"என்று சொன்ன கணவனை 
காதலோடு கட்டிக்கொண்டாள் கீதா.   
   


  


   

Friday, May 13, 2011

தேர்தல் - 2011

ஒருவழியாய் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.இது வரவேற்க வேண்டிய அம்சம் மட்டுமல்ல,நாட்டுக்கு அவசியம் தேவையான ஒன்றும்கூட .ஆனால்,ஜெயலலிதாவின் கடந்தகால ஆட்சி அவரும் நேர்மையானவர் அல்ல என்பதையே காட்டுகிறது.இருந்தாலும் மக்கள் அதையெல்லாம் மறந்து வாக்களித்து இருக்கிறார்கள்.அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு ஜெயலலிதாவுக்கு இருக்கிறது.ஒரு மாறுதலான,மக்களுக்கு ஆறுதலான ஆட்சியை தரவேண்டும் என்பதே என் போன்ற சராசரி குடிமகனின் கனவு.கனவு மெய்ப்பட ஆவண செய்வாரா ஜெயலலிதா?     

Tuesday, April 19, 2011

ஒரு சினிமா,ஒரு ரசிகன் (சிறுகதை)

அந்த மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டரில் ஏகக் கூட்டம். எங்கு பார்த்தாலும் ரசிக 
மன்றக் கொடிகளும் ,தோரணங்களும், கட் அவுட்களுமாக காட்சியளித்தன .   
தொடர்ந்து சூப்பர் ஹிட்  படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சூப்பர்
ஹீரோ நரேன்கௌதமின் புதுப்படம் ஒன்று அன்றுதான் ரிலீஸ் .ப்ளாக்கில் 
விற்கும் டிக்கெட்களை வாங்க கூட்டம் அலைமோதியது .

நரேன்கௌதமின் தீவிர ரசிகனான சுனில், ப்ளாக்கில் டிக்கெட் விற்கும் 
பையனிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தான்.

" இருநூறு ரூபாய்ன்னு ஒரு டிக்கெட் கொடுப்பா ! "

"இல்லீங்க ஒரே ரேட் முன்னூறு ரூபா "  

"நூத்தம்பது  ரூபா டிக்கெட்டுக்கு முன்னூறு ரூபா கேக்குறது  ரொம்ப
அதிகம்பா ."

"அதிகம்தான். இருந்தாலும் முதல் நாள் ,முதல் ஷோ பாக்கணும்னு 
நெனைக்கிறப்ப  கணக்கு பாக்க கூடாது ."

"இருநூத்தம்பதுன்னாச்சும் போட்டு ஒருடிக்கெட் குடுப்பா "என்று சுனில் 
பேரம் பேசிக் கொண்டிருக்கும்போதே ,

நாற்பத்தைந்து  வயது மதிக்கத்தக்க ஒருவர் , "டிக்கெட் ஒண்ணு 
வேணும்ப்பா " என்றார்  பையனிடம் .

"முன்னூறு ரூபா ஆகும் சார். பரவாயில்லியா ? "என்று பையன் சொல்ல,

கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு ,டிக்கெட்டோடு தியேட்டருக்குள்
நுழைந்தார் நாற்பத்தைந்து வயது பரந்தாமன் .

"போறவருக்கு நாப்பத்தஞ்சி வயசிருக்கும். இந்த வயசுலயும் ,நரேன்
கௌதமுக்கு தீவிர ரசிகர்கள் இருக்கிறதாலதான் ,எங்களோட ப்ளாக்
டிக்கெட் வியாபாரம் ஓஹோன்னு நடக்குது "என்று பையன் பெருமை
பீற்றிக்கொள்ள இனி பேரம் பேசுவதில் பிரயோஜனம் இல்லை என்று
முன்னூறு ரூபாய் கொடுத்து ,டிக்கெட் வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள்
நுழைந்தான் சுனில் .                                                                                               

இடம் பார்த்து அமர்ந்த  சுனில், பக்கத்து சீட்டைப் பார்த்தான்,பக்கத்து சீட்டில்
அதே  நாற்பத்தைந்து வயது பரந்தாமன் .

சுனிலுக்கு அந்த ஆள் மீது எரிச்சலாக இருந்தது ."என் அப்பா வயதிருக்கும்
இவருக்கு,இந்த வயதில் கல்லூரி மாணவர்கள் ,இளைஞர்களைப் போல
முதல் நாள் ,முதல் ஷோ பார்க்க ஆசைப்படுகிறாரே ! எங்களுக்குத்தான்
இந்த வயதில் குடும்பம் ,பொறுப்பு என்று பெரிதாக எதுவுமில்லை.இவர்
எப்படி இப்படி பொறுப்பில்லாமல் சினிமாவுக்காக அலைகிறார்? என்று
யோசித்துக் கொண்டிருக்கும்போதே, படம் போடப்பட்டுவிட ,சினிமாவோடு
ஒன்றினான்.

நேரம் போனதே தெரியாமல், இடைவேளை வந்தது.அந்தளவு படம் செம
விறுவிறுப்பாக இருந்தது.


சுனில் தியேட்டருக்குள் இருந்த ஸ்டாலில் ஐஸ்கிரீம் ஒன்றோடு,சிகரெட்
ஒன்றையும் நாசமாக்கிவிட்டு, இருக்கைக்கு வந்தான் . பக்கத்து சீட்
பரந்தாமன் எந்தவித உற்சாகமுமின்றி அப்படியே அமர்ந்திருந்தார்.

"இந்த ஆள் நரேன்கௌதமின் ரசிகன் மாதிரியே தெரியவில்லை .பாடல்
காட்சியோ ,சண்டைக் காட்சியோ ,காமெடிக் காட்சியோ வந்தபோதுகூட
எந்தவித ஆரவாரமும் காட்டவில்லை .பின்... எதற்காக முன்னூறு ரூபாய்
செலவு செய்து முதல் நாள், முதல் காட்சி பார்க்க வர வேண்டும் ?"
குழம்பிப் போனான் சுனில் .

இடைவேளைக்குப் பின் படம் இன்னும் விறுவிறுப்பானது.ஆனால்,
படத்தின் முடிவுதான் யாரும் எதிர்பாராதது .ஹீரோ நரேன்கௌதம் இறந்து
விடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது .

ரசிகர்கள் அனைவருக்கும் வருத்தமாய் இருந்தாலும் ,கதைக்கு அந்த
கிளைமாக்ஸ்தான்  மிகப் பொருத்தம் என்பதால் ,மனதை தேற்றிக் கொண்டு
வெளியேறத் தொடங்கினர் .

சுனில் வெளியேற எத்தனித்தபோது பக்கத்து சீட் பரந்தாமன் கதறி அழுது
கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப் போனான் .

படத்தில்  நரேன்கௌதம் இறந்ததற்கே இப்படி அழுகிறாரே!...இவரல்லவா
தீவிர  ரசிகன் .இவரைப் போய் சந்தேகப்பட்டேனே ! தோரணம் கட்டிய ,
ப்ளெக்ஸ் போர்டு வைத்த வெறித்தனமான ரசிகர்கள்கூட ,ஏன் நான்கூட
இப்படி அழவில்லையே !அழட்டும்,மனப்பாரம் குறையும்வரை அழட்டும் '
என்று மௌனமாய்  தியேட்டரைவிட்டு வெளியேறினான் சுனில் .

கதைக்கு அவசியமான டெயில் பீஸ் :                   

பரந்தாமன் நடிகனாக வேண்டும் என்ற வெறியில் சென்னைக்கு வந்து
இருபது வருடங்களாகிறது .இந்த இருபது வருடத்தில் அவர் பார்க்காத
தயாரிப்பாளர்களும் இல்லை ,டைரக்டர்களும் இல்லை,ஏறி இறங்காத
சினிமாக் கம்பெனிகளும் இல்லை.அதிர்ஷ்டவசமாய் நரேன்கௌதமின்
இந்த புதுப்படத்தில் இரண்டு ,மூன்று சீன்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க,
சந்தோஷமாய் நடித்தார் .அந்தக் காட்சிகளை பார்க்கவே ப்ளாக்கில்
முன்னூறு ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு ஆவலோடு வந்தார்
தியேட்டருக்கு .ஆனால் ...படத்தின் நீளம் கருதி ,அவர் நடித்த காட்சிகள்
வெட்டி எறியப்பட்டிருக்க ,அந்த துக்கம் தாளாமல் தான் கதறி அழுதார்
என்பது , பாவம் சுனிலுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.    
  
   


Saturday, April 16, 2011

தேர்தல் - 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்குப் பிறகு தமிழ்நாட்டில்
தேர்தல் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.முடிவுகளை தெரிந்து கொள்ளத்தான் நீண்ண்ண்...ட நாட்கள்  காத்திருக்க வேண்டி   
இருக்கிறது.    மரண அவஸ்தை என்பார்களே அதைத்  
தான்  எல்லா அரசியல்வாதிகளும் இப்போது அனுபவித்துக் 
கொண்டிருப்பார்கள் . ஒவ்வொரு முறையும் தேர்தல் கமிஷன் 
ஆரம்பத்தில்  கெடுபிடியாய் இருப்பதும் , கடைசி கட்டத்தில் அவர்கள் 
கண்ணில் மண்ணை தூவி விட்டு அரசியல்வாதிகள் பணத்தால் தீர்ப்பை 
விலைக்கு வாங்குவதும்  நடந்து கொண்டே இருக்கிறது . இன்றைக்கு 
தேர்தலில் நிற்க நல்லவன் என்ற தகுதியெல்லாம் மலையேறி போயாச்சு.
பணபலம் படைத்தவனாக , பாவ செயல்களுக்கு அஞ்சாதவனாக இருந்தால்
மட்டுமே சீட் வழங்கப்படுகிறது .இவர்கள் ஜெயித்தால் நாட்டுக்கு நல்லது
தான் செய்வார்களா ? செய்யத்தான் விடுவார்களா ? 

   
Picture Of Indian Flag, India Flag, Indian Flag, National Flag of India, Flag of India Picture, Indian Flag Picture, Indian National Flag, About India Flag

காமராஜர் போல, கக்கன் போல, அண்ணாதுரை போல யாராவது ஒரு நல்ல தலைவன் வந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற 
மாட்டானா ? என்ற ஏக்கம் எல்லோரைப் போல எனக்கும் உண்டு .அதுவரை 

      "சொல்லடி பாரத மாதா - நீ 
       சுதந்திரம் பெற்றது  தீதா "

என்றே புலம்பத் தோன்றுகிறது. 

Monday, April 4, 2011

கிரிக்கெட்

இந்தியாவின்  28 வருட காத்திருப்பு .சச்சினின் 21 வருட கனவு நிறைவேறிய
நாள் ஏப்ரல் 2 .உலகக் கோப்பையை வென்று இந்தியர்கள் அனைவரையும்
ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளனர் நம் வீரர்கள்.மேற்கு இந்திய தீவுகள்,
பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா,ஸ்ரீலங்கா என்று நான்கு முன்னாள் சாம்பியன்
களை வரிசையாக வென்று சாம்பியன்களின் சாம்ப்பியனாக திகழ்கிறது
இந்தியா.ஆரம்பத்திலே சேவாக், சச்சின் வெளியேற அதிர்ந்து போனது 
ஒட்டு மொத்த இந்தியாவும்.ஆனால், பின்னால் வந்த கம்பீரும்,டோனியும் 
சிறப்பாய் ஆட சரிவிலிருந்து மீண்ட இந்தியா கோப்பையையும் வென்றது. 
வீரர்கள் அனைவரும் பரிசு மழையிலும்,பாராட்டு மழையிலும் நனைந்தார்கள் .நனைகிறார்கள் .நனைவார்கள் .
 tamil cricket news-ICC Cricet World Cup 2010
ஆனாலும்,சின்ன வருத்தம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதும், அது
வீரர்களுக்கு கொடுப்பதாக சொன்ன ஒரு கோடிரூபாய் மீதும். உலகின்
நெம்பர் 1 பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்தியா மூன்று கோடியோ,
அஞ்சு கோடியோ ஒவ்வொருவருக்கும் அறிவித்திருக்கலாம் .ஏனென்றால்
அவர்களை  வைத்துதானே கிரிக்கெட் வாரியம்  கோடிகளை குவித்துக்
கொண்டிருக்கிறது .மற்றபடி எல்லோரும்  எதிர்பார்த்ததைப் போல இந்தியா
உலகக் கோப்பையை வென்றது அடுத்து ஒருமுறை இந்தியா வெல்லும்வரை எல்லார்  மனதிலும்  பசுமையாய்  நிற்கும் ...நிற்கும் ...
நிற்கும்.

   

Friday, March 25, 2011

கிரிக்கெட்

காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி கூட்டு முயற்சிக்கு 
கிடைத்த வெற்றி . ஃபீல்டிங் ,பௌலிங் இரண்டிலும் நல்ல முன்னேற்றம் .
ஆஸ்திரேலியாவை ஆரம்பம் முதலே அதிகம் ரன் அடிக்கவிடாமல் 
பார்த்துக் கொண்டது சேஸிங்போது நல்ல பலனைக் கொடுத்தது .இது 
யுவராஜின் உலகக் கோப்பைப் போல. தொடர்ந்து பேட்டிங், பௌலிங் 
இரண்டிலும் அசத்திவருகிறார் .கடைசி கட்ட டென்ஷனை குறைத்தது  
ரெய்னா தான்.அதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல்  தேங்க்ஸ் .சச்சின் 
சதத்தில் சதம் காணாவிட்டாலும் 18,000 ரன்களை கடந்து இன்னுமொரு  
சாதனையை படைத்தார் .மொகாலி மைதானம் இப்போதே திருவிழா 
பரபரப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது .ஏனென்றால் நம் பிரதமர் 
மேட்ச்சை பார்க்க வருவதோடு பாகிஸ்தான் பிரதமர் ,ஜனாதிபதி 
இருவரையும் அழைத்துள்ளார் . 

 Suresh Raina gives Yuvraj Singh a hug after the pair took India into the semi-final

பங்காளி பாகிஸ்தானை மீண்டும் மண்ணை கவ்வ வைக்க ஒரு 
சந்தர்ப்பம்.பயன்படுத்திக் கொள்வார்கள் நம்மவர்கள் என்றே 
நினைக்கிறேன் .

          உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை ,பாகிஸ்தான் ஒரு
முறைகூட வென்றதில்லை என்பது இன்னொரு இனிப்பான செய்தி .             

Monday, March 21, 2011

கிரிக்கெட்

மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் மிடில் ஆர்டர் ரவிராம்பால் என்ற சுனாமியால் நிலைகுலைந்து  போனது .யுவராஜ் மட்டும் தாக்குப் 
பிடித்து சதம் அடித்து சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தினார்.இம்முறை 
பௌலிங்கும் கொஞ்சம் எடுபட மேற்கிந்திய தீவுகள் அணியை 188 -க்குள் 
சுருட்ட முடிந்தது. இனிமேல் தான் காலிறுதி ,அரையிறுதி ,இறுதிப் 
போட்டி என்று நிஜ ஆட்டம் ஆரம்பம் .காலிறுதியில் நடப்பு சாம்பியன் 
ஆஸ்திரேலியாவை வெல்வதென்பது சாதாரண காரியமல்ல .ப்ரெட் லீ ,
ஜான்சன் ,ஷான் டைட்,போன்ற வேகப்பந்து வீச்சளார்களை எதிர்
கொண்டு ரன் குவிப்பது மிகவும் சிரமம் .வியாழன் விடியல் 
(24 -3 -11 )  இந்தியாவுக்கு சாதகமாய் அமைய 
எல்லோரும் பிரார்த்திப்போம் .    

Sunday, March 20, 2011

நாலு ஏக்கர் (சிறுகதை)

               பண்ணையார்  பரந்தாமனின்     கார் தோட்ட வீட்டின் முன்  வந்து நிற்க, வயலில் வேலை செய்து கொண்டிருந்த வேலையாள் கந்தசாமி ஓடி வந்தான்.
      
காரிலிருந்து இறங்கிய பரந்தாமன், “ என்ன கந்தசாமி செளக்கியமா? பாத்து ரொம்ப நாளாச்சு” என்றார்.


“செளக்கியந்தாங்கய்யா.. நீங்க முன்ன மாதிரி அடிக்கடி தோட்டத்துக்கு வர்றது இல்லங்கிறது தான் பெரிய குறை?"

 "என்ன கந்தசாமி பண்றது ?மொதல்ல விவசாயம் மட்டுந்தான் ,
 அதனால அடிக்கடி வரமுடிஞ்சது .இப்ப ஊர்த்தலைவர் ,கோயில் 
தர்மகர்த்தான்னு நெறைய பொறுப்புகள்ல  இருக்கிறதால  அதிகம்
 இங்க  வரமுடியல . "


"வெயிலுக்கு எதமா எளநி வெட்டி வரட்டுங்களா  எசமான்?"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.வடக்கால இருக்குற நாலு ஏக்கர்
நெலத்துல நடவு வேலை முடிஞ்சுதா கந்தசாமி ?"

"நாலு நாளைக்கு முன்னமே முடிஞ்சுதுங்க அய்யா !"

"அறுவடைவரைக்கும்  இனிமே அது உம்பொறுப்பு .என்னை எதிர்
 பாக்காம மருந்து ,யூரியா ,தண்ணி விடறதுன்னு எல்லா வேலையும் 
கவனமா செய் .ஏன்னா ஆஸ்திரேலியாவுல இருக்கிற எம் மகளைப்  
பாக்க நானும்,என் மனைவியும் போறோம் .வர எப்படியும் மூணு 
மாசமாகும் ."

"ஐயா...நா ஒங்ககிட்ட ஒரு சேதி சொல்லணும் .என்தூரத்து  மாமா 
ஒருத்தர் டவுன்ல ஒரு ஓட்டல் கடை நடத்திகிட்டு இருக்கார் .அங்க 
வியாபாரம் நல்லா நடக்கிறதால உதவிக்கு நம்பிக்கையா ஒரு ஆள் 
வேணும்னு என்னைக் கூப்பிடறார் .அதான்,உங்ககிட்ட சொல்லிட்டு 
இந்த மாசத்தோட நின்னுக்கலாம்னு..." என்று இழுத்தான் கந்தசாமி .

"இத பார் கந்தசாமி ...இந்த நெல் அறுவடைவரைக்கும் இரு .
அப்புறம் நானே  உன்னை சந்தோசமா அனுப்பி வைக்கிறேன். "

"இல்லீங்க ஐயா...அவருக்கு உடனடியா ஆள் தேவையாம்.ஒரு 
வாரத்துக்குள்ள எம்பதில சொல்லச் சொல்லிருக்கார் ."

"இப்படி திடீர்னு நின்னுக்கறேன்னு சொன்னா நா வேற ஆள் உடனே 
தேடறது கஷ்டமில்லியா ?"

"நா வேணா வேற ஆள ஏற்பாடு பண்ணிட்டு கிளம்பட்டுமாய்யா?" 

"அதெல்லாம் சரியா வராது .அறுவடைவரைக்கும் இருந்துட்டு போ "
அதிகாரத் தோரணையில் சொன்னார் பரந்தாமன் .


அதற்குமேல் முதலாளியிடம் எதுவும் பேசமுடியாமல்,"சரிங்கய்யா" 
என்றான் வேண்டாவெறுப்பாய் .

'பத்து வருஷம் விசுவாசமாய் வேலை செஞ்சு என்ன பிரயோஜனம் ?நான் 
இன்னும் முன்னேற ஒரு சந்தர்ப்பம் வரும்போது முதலாளியே முட்டுக்
கட்டை போடலாமா? முதலாளி வர்க்கம்,தொழிலாளி வர்க்கத்தை 
வளரவே விடாது என்பதெல்லாம் உண்மைதானா? முதலாளி மேல் 
கோபம்,கோபமாய் வர அதை விவசாயத்தில் காட்டினான்.நெல் 
வயலுக்கு சரிவர தண்ணீர் விடாமல் மருந்து,உரங்களும் வைக்காமல் 
கடமைக்கு வேலை செய்தான் .அமோகமாய் விளைச்சல் தரவேண்டிய 
பயிர்கள் கிட்டத்தட்ட கருகும் நிலைக்கு வந்து விட்டன .அதைப் பார்த்த 
கந்தசாமிக்கு முதலாளியை பழிவாங்கிவிட்டது  போல் தோன்றியது .

அறுவடைக்கு ஒருவாரம் முன்னதாக ஆஸ்திரேலியாவிலிருந்து 
கந்தசாமிக்கு போன் செய்த பண்ணையார் ,"பத்து வருஷமா எங்கிட்ட 
விசுவாசமா இருந்த உன்னை வெறும் கையோட அனுப்ப மனசில்ல 
எனக்கு .அதான், அறுவடை வரைக்கும் இருக்கச் சொன்னேன் .அந்த நாலு 
ஏக்கர் நெல்லையும் நீயே அறுவடைசெஞ்சு எடுத்துக்கோ .உனக்கு 
இப்படியொரு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும்னுதான் இத்தனை நாளும் 
நான் சைலன்ட்டா இருந்தேன் "என்று சொல்லி முடிப்பதற்குள் ,
சைலன்ட்டாய் மயங்கி விழுந்தான் கந்தசாமி .     
           
            

          
  
                   


                      
        
               

        






                                

Sunday, March 13, 2011

கிரிக்கெட்

மீண்டும் ஒருமுறை இந்தியாவின்சொதப்பல் ஆட்டத்தைப் பார்த்தபோது 
எரிச்சலே வந்தது .வலுவான அடித்தளத்தை சச்சினும் ,சேவாக்கும் 
அமைத்துக் கொடுத்தும் மிடில்ஆர்டர்பேட்ஸ்மேன்கள் அதைப்
 பயன்படுத்திக்கொள்ளாமல் எரிச்சலூட்டினர் .இதைத் தான் சகித்துக் கொண்டோம் என்றால் நெஹ்ராவின் கடைசி ஓவர் மறக்க முடியாத ,
மன்னிக்க முடியாத ஒன்று .டோனிக்கும் இப்போது கொஞ்சம் 
தலைக்கனம் ஏறிவிட்டதாகவே தோன்றுகிறது .தனக்கு பிடித்துவிட்டால் சரியாக விளையாடாத வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார் .
இது எதில் போய்முடியுமோ? உலகக் கோப்பை இம்முறையும் கனவாகிப் 
போய்விடக்கூடாது என்பதே ஒவ்வொரு இந்தியனின் விருப்பம் . 
சவுத் ஆப்ரிக்காவுக்கு எதிரான சச்சினின் சதம் மட்டுமே என் போன்ற 
ரசிகர்களுக்கு சிறிது ஆறுதல் .  

Friday, March 11, 2011

கிரிக்கெட்

           
             கத்துக்குட்டி  நெதர்லாந்திடமே போராடி ஜெயித்த இந்தியா வலுவான தென்ஆப்ரிக்கா ,ஆஸ்திரேலியா போன்ற டீம்களை எல்லாம் 
வென்று கோப்பையை வெல்லுமா என்றே தெரியவில்லை.கிரிக்கெட்
வல்லுனர்களும்,மீடியாக்களும்இந்தியாவை ஓவராகப் புகழ்ந்து காலி  
செய்துவிடுவார்களோ என்ற அச்சமே எழுகிறது .இங்கிலாந்துடன்    
மோதியபோதேஇந்தியாவுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுவிட்டது . 
சுதாரித்தால் கப்பு (Cup)இல்லாவிட்டால் ஆப்பு . 

Sunday, February 27, 2011

கிரிக்கெட்




                   இந்தியா , இங்கிலாந்து அணிகள்  மோதிய  உலகக்கோப்பை  கிரிக்கெட்   
மேட்ச்  பார்த்தேன். 20  20  கிரிக்கெட்  போல   மகா  விறுவிறுப்பு. 338 
 ரன்கள்  இந்தியாகுவித்ததும் வெற்றி  உறுதி  என்று  நினைத்தேன் . 
ஆனால், இந்தியா போன்ற  உயிரற்ற பிட்ச்களில் 350 கூட   பாதுகாப்பான 
 ஸ்கோர் என்று கூறமுடியாது . தோல்வியின்  விளிம்புக்கே  சென்றுவிட்ட
 இந்தியா மேட்சை  (  Tie )  செய்தது  சற்றே  ஆறுதலான  விசயம்.  சச்சின் 
 ரசிகர்களுக்கு  அவரின்  சதம் சரியான திருப்பதி  லட்டு .        

Wednesday, February 23, 2011

பிடிச்சிருக்கா ? ( சிறுகதை )



                      " நட்சத்திரா,  நட்சத்திரா..."  என்று என்னை
கூப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தனர் அப்பா அம்மா இருவரும்.


                       "என்னப்பா?" என்று நான் கேட்க ,

                         "அடுத்த வாரம் நடக்கப்போற உன் கல்யாணத்துக்காக பட்டுப்புடவை ,  நகைகள் எல்லாம் வாங்கி வந்திருக்கோம்.  பார்த்து  சொல்லும்மா  எப்படி  இருக்குன்னு ?"

          
                          "நட்சத்திரா,  உனக்குப்  பிடிச்ச  மெரூன்கலர்ல பட்டுப்புடவை  எடுத்து  வந்திருக்கோம் . விலை  ஒரு லட்சம்  ரூபாய் . பிடிச்சிருக்கா ?"


                        " இந்த  வைர நெக்லசை பாரும்மா.  லேட்டஸ்ட்  டிசைனாம் .  உனக்குன்னே   செஞ்ச  மாதிரி  இருக்கு ."


                       "இது   புது   மாடல் லேடீஸ்  வாட்ச் . பத்தாயிரம்  ரூபாய்.  பிடிச்சிருக்கா ? "


                      "இது   நீ   ரொம்ப   நாளா   கேட்டுக்கிட்டிருந்த  தங்க  கொலுசு .  பிடிச்சிருக்கா   பாரு ,  இல்லேன்னா   மாத்திக்கலாம் ." 


                    " இப்படிப்   பிடிச்சிருக்கா , பிடிச்சிருக்கா  என்று   கேட்ட   அப்பா , அம்மா   பதினாறு   வயசு  வித்தியாசமுள்ள   மாமா   மகனை   கல்யாணம்  பண்ணிக்க   உனக்கு  பிடிச்சிருக்கா ? " என்று  மட்டும்  கடைசிவரை   என்னிடம்   கேட்கவே   இல்லை .  

                         












                            
                        
                       

பள்ளிக்கடன் (சிறுகதை)


                  கங்காதரனுக்கு தன் மகனின் செயல் ஆச்சரியமளிக்க அவனிடம்
கேட்டேவிட்டார்.

                      "ஏம்ப்பா,பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வுல மாவட்டத்திலேயே
முதல் மார்க் வாங்கி பாஸாகி இருக்கே நீ .அதனால ,நெறைய தனியார்  பள்ளிங்க எங்க ஸ்கூல்ல வந்து பிளஸ்டூ  சேருங்க ,பீஸ்னு ஒரு பைசா  கட்ட வேணாம்னு போட்டி போட்டுக்கிட்டு  கூப்புடுறாங்க .நீ என்னடான்னா  முன்ன  படிச்ச கவர்ன்மெண்ட் ஸ்கூல்லதான் பிளஸ்டூ-வும்  படிப்பேன்னு  பிடிவாதமா இருக்கே. என்ன காரணம்ப்பா ? " என்றார் .

                 
                "அப்பா நீங்க ஒரு விவசாயி.  நீங்க விதைச்ச விதை வளர்ந்து   செடியாகி,  பூத்து, காய்கிறேத்துக்கு  நீர் பாய்ச்சி,  களையெடுத்து, உரம் வச்சி  எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்க?  அது பலன்தர்ற  நேரத்துல  வேற  யாராவது  அறுவடை செஞ்சிகிட்டுப்  போனா உங்க  மனசு எவ்வளவு  வேதனைப்படும் ?  அதுமாதிரி  தாம்ப்பா , இவ்வளவு  நாள்  கஷ்டப்பட்டு  என்னை  மாவட்டத்திலேயே  முதலாவதா  வர  பாடுபட்ட  ஆசிரியர்களையும் , ஸ்கூலையும்  மறந்துட்டுப்  போறதும்கூட.  விதைச்சவங்களே அதோட  முழுப்பலனையும்  அடையணும்னுதான் நான்  முன்ன  படிச்ச ஸ்கூல்லயே   படிக்க  முடிவெடுத்தேன் ... " என்று  சொல்லிக்   கொண்டேபோன  மகனின் பேச்சிலிருந்த  அர்த்தம்  கங்காதரனை  பிரமிக்க  வைத்தது .        
 























Monday, February 21, 2011

என்னைப் பற்றி..

எழுத்தாளன், உதவி வசனகர்த்தா, உதவி இயக்குனர் என்று சின்னத்திரையில் பல முகங்கள் கொண்டிருந்தாலும் இப்பதிவுலகத்திற்கு புதியவனான என்னை வழிநடத்தி செல்ல உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

Tuesday, February 8, 2011

என் முதல் பதிவு

பதிவுலகுக்கு புதியவனான  என்னை உங்களுடன் இணைத்துக்  கொள்வதில்  பேரு மகிழ்ச்சி அடைகிறேன்