சினிமா இயக்குனர் சுதந்திரராஜாவுக்கு தேசியவிருது அறிவிக்கப்பட்ட
செய்திகேட்டு அவரை பேட்டிகாண பத்திரிக்கை நிருபர் கூட்டம் அவரின்
அலுவலகத்தை மொய்த்தது.
சுதந்திரராஜாவை நோக்கி சரமாரியாய் கேள்விக்கணைகளை வீசவும்
ஆரம்பித்தனர்.
"தேசிய விருதுக்கான இயக்குனரா உங்களை தேர்ந்தெடுக்கப்பட்டதைக்
கேள்விப்பட்டபோது, எப்படி இருந்தது உங்க மனநிலை?"
"எல்லார் மாதிரியும் பரவசப்பட்டேன், சந்தோசப்பட்டேன்."
"உங்களின் முதல் படத்திற்கே தேசியவிருது கிடைத்திருக்கிறது. இதை
எதிர்பார்த்தீர்களா?"
"விருதுக்கான எல்லா தகுதிகளும் என் படத்திற்கு இருந்ததாகவே
நினைக்கிறேன்."
"உங்க பேச்சுலதான் சந்தோசம் இருக்கு. ஆனா, உங்க முகத்துல ஏதோ
வருத்தம் இருக்கிறமாதிரி தெரியுது."
"நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி.நா இந்த சினிமா ஃபீல்டுக்கு வந்தப்ப
எனக்கு ஒரு கனவு இருந்துச்சு.அது,நாஒரு படம் டைரக்ட் பண்ணனும்,
அது என் கிராமத்து தியேட்டர்ல ஓடணும், எம் மக்களோட அந்தப்
படத்தை நா பார்க்கணும்னு.புதுப்படம் என் கிராமத்துக்கு வர எப்பவும்
கொஞ்சம் லேட்டாகும்.என் படமும் அங்க போடறத்துக்குள்ள, இருந்த
ஒரே தியேட்டரையும் நேத்துதான் இடிச்சாங்களாம். கொஞ்சநாளா
நஷ்டத்துல ஓடினதால எடுத்த முடிவாம். அதான், விருது கிடைச்ச
சந்தோசத்தைவிட,தியேட்டர் இடிச்ச துக்கம் என்னை வதைக்குது."என்று
சுதந்திரராஜா லேசாய் கண்கலங்க, நிருபர் கூட்டம் அதிர்ச்சியில்
உறைந்தது.
No comments:
Post a Comment