அது கேசவன் தானே!ஏன் என்னைப் பார்த்து அந்த சலூனுக்குள் ஒளிகிறான்? வியப்பாக இருந்தது எனக்கு.
நான் கொஞ்சம் லொட,லொடவென்று பேசும் டைப். அதற்குப் பயந்து ஒளிகிறானா?அல்லது LIC பாலிசி போடச் சொல்லி ரொம்ப நாட்களாக
வற்புறுத்தி வருகிறேன். அதற்குப் பயந்து பதுங்குகிறானா? அவனிடமே
கேட்டு விடுவது என்ற முடிவோடு போனேன்.
"ஏன்டா என்னைப் பாத்து ஒளியறே? பாலிசிக்குப் பயந்தா?" என்றேன்
காட்டமாய்.
"அடப்பாவி , நான் ஒளிஞ்சது வேற ஒரு காரணத்துக்காகடா. உனக்குப்
பக்கத்துல நின்னுகிட்டிருந்தவர் என்னோட பழைய முதலாளிடா.அவருக்கு
தொழில்ல பெருத்த நஷ்டம். அங்க வேலை பாத்த தொழிலாளிகளுக்கு
ரெண்டுமாதச் சம்பளபாக்கி இருக்கு என்னையும் சேத்து.ஒரு மாசம்
முன்ன அவரைப் பாத்தப்ப,சம்பள பாக்கிக்காக தொழிலாளிகளைப் பாத்தா
ஓடி ஒளிஞ்சுக்க வேண்டி இருக்கு. ரொம்ப கொடுமைப்பா இதெல்லாம்னு
வருத்தப்பட்டுச் சொன்னார். இந்தமுறை அவரு என்னைப்பாத்து
ஒளியிறதுக்குள்ள நானா ஒளிஞ்சுக்கிட்டேன் .என்னால அவருக்கு
செய்ய முடிஞ்ச உதவி இதான்"என்றான் கேசவன்.
கேசவன் எட்டாவது அதிசயமாய் எனக்குத் தெரிந்தான் இப்போது.
(குமுதம் இதழில் வந்த சிறுகதை இது.)
No comments:
Post a Comment