Monday, November 14, 2011

சுதந்திர வலி! (சிறுகதை)


அன்று சுதந்திர தினம்.அந்த பள்ளிக்கூடத்தின் தேசியக்கொடியை ஏற்றி
வைக்க சிறப்பு விருந்தினராக அந்த பகுதியைச் சேர்ந்த பெண் விடுதலைப்
போராட்ட தியாகி ஈஸ்வரியை அழைத்திருந்தனர்.கொடியை ஏற்றி வைத்து
விட்டு பேச ஆரம்பித்தார் ஈஸ்வரி.

"நம்மநாடு  சுதந்திரமடைஞ்சு 65 வருஷம்  ஆகுது . இந்த 65 வருஷத்துல
நாம அறிவியல்,மருத்துவம்,தொலைத்தொடர்பு துறைன்னு பல துறையில
முன்னேறி இருக்கோம்.ரொம்ப பெருமையாத் தான் இருக்கு.ஆனா,இந்த
நாட்டு  விடுதலைக்காக  பாடுபட்ட  தியாகிகளோட  வாழ்க்கை  எப்படி
இருக்குன்னு பாத்தா கொஞ்சம் அவலமாத்தான் இருக்கு.என்னையே
எடுத்துக்கோங்க,நா நேதாஜியோட இந்திய தேசிய ராணுவத்துல
சேந்து,பர்மாவுல நடந்த பயிற்சியில எல்லாம் கலந்துகிட்டு நாட்டோட
விடுதலைக்காக போராடினவ தான்.கல்யாணம்,காட்சியெல்லாம்கூட
வேண்டாம்னுட்டு நிறைய போராட்டத்துல கலந்துகிட்டேன்.நாடும்
விடுதலையாச்சு.அப்புறம், உடம்புல தெம்பு  இருக்கிறவரைக்கும்
உழைச்சு பிழைச்சி வாழ்க்கையை ஓட்டிட்டேன்.இப்ப எனக்கு 88
வயசாகுது. எந்த வேலையும் செய்ய முடியல. பசி வந்திட பத்தும்
பறக்கும்பாங்க.அந்த பசியை வெல்ல தியாகிங்க பென்ஷனுக்கு  மனு
கொடுக்க போனா,"நீ எந்த போராட்டத்துல கலந்துகிட்ட?எத்தனை தடவ
ஜெயிலுக்கு போயிருக்க? அதுக்கெல்லாம் ஆதாரம்  இருக்கான்னு
கேக்குறாங்க! நாட்டுக்காக பாடுபட்ட நா எந்த ஆதாரமும் வச்சுக்கல.
ஆதாரம் இல்லன்னா பென்ஷன் இல்லன்னு சொல்லிட்டாங்க.

நாடு அடிமைப்பட்டு கிடந்தப்ப நாங்க போராடி மீட்டோம். இப்ப நாங்க
வறுமையில அடிபட்டு கிடக்குறப்ப மீட்க வேண்டியது இந்த நாட்டோட
கடமையில்லையா? இந்த கொடி ஏத்துற நிகழ்ச்சியில கலந்துக்ககூட
எங்கிட்ட ஒரு நல்ல புடவை இல்ல.கட்டியிருக்கிற இந்த புடவையை
அவுத்தா ஆயிரம் ஒட்டுகளும்,கிழிசல்களும் தெரியும்"என்று ஈஸ்வரி
கண்கலங்க,பள்ளியில் இருந்தவர்கள் மட்டுமல்ல,கம்பீரமாய் பறந்து
கொண்டிருந்த  தேசியக்கொடியும்  தலைகவிழ்ந்து  தன்  துக்கத்தை
வெளிப்படுத்தியது.  

  
                            
       

No comments:

Post a Comment