"நட்சத்திரா...நட்சத்திரா..."என்று என்னைக் கூப்பிட்டுக்கொண்டே அப்பா,
அம்மா இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.
"என்னப்பா ?" என்று நான் கேட்க,
"அடுத்த வாரம் நடக்கப்போற உன் கல்யாணத்துக்காகப் பட்டுப்புடவை,
நகைகள் எல்லாம் வாங்கி வந்துருக்கோம்.பாத்து சொல்லுமா எப்படி
இருக்குன்னு?"
"நட்சத்திரா,உனக்குப் பிடிச்ச மெரூன்கலர்லயே பட்டுப்புடவை எடுத்து
வந்திருக்கோம்.விலை ஒருலட்ச ரூபா. பிடிச்சிருக்கா?"
"இந்த வைர நெக்லஸை பாரும்மா.லேட்டஸ்ட் டிசைனாம்.உனக்குன்னே
செஞ்ச மாதிரி இருக்கு."
"இது புது மாடல் லேடீஸ் வாட்ச்.இருபதாயிரம் ரூபா.பிடிச்சிருக்காம்மா?"
"இது நீ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்த தங்க கொலுசு.பிடிச்சிருக்கா பாரு.
இல்லேன்னா மாத்திக்கலாம்."
"இப்படிப் பிடிச்சிருக்கா,பிடிச்சிருக்கா என்று கேட்ட அப்பா,அம்மா பதினேழு
வயசு வித்தியாசமுள்ள மாமா பையனை கல்யாணம் பண்ணிக்க உனக்குப்
பிடிச்சிருக்கா? என்று மட்டும் கடைசிவரை என்னிடம் கேட்கவே
இல்லை.
(குமுதம் இதழில் முத்திரைக் கதை அந்தஸ்த்தோடு வந்தது இது.)
No comments:
Post a Comment