உன் உதடுகள்
உச்சரித்து,உச்சரித்தே
தமிழ்மொழி
செம்மொழியாகி விட்டதடி !
கவிதை ஒன்றை எழுதிவாருங்கள்
என்றார் ஆசிரியர்.
கவிதை ஒன்றைப் பாருங்கள்
என்றேன் நான்
உன்னைக் கூட்டிப்போய் !
ஹிந்தி படிக்கச்சொன்ன
அப்பாவிடம்
அந்நியமொழி கற்க
ஆர்வமில்லை என்றேன்.
உன் உதடுகள்
உச்சரிக்காத மொழி
எனக்கு
அந்நியமொழி தானே!
உன் கையெழுத்துபோல்
என் தலையெழுத்தையும்
அழகாக்கிவிடு
காதல் மைகொண்டு !
என் கவிதையெல்லாம்
கிறுக்கலாய் இருந்தது
உன்னைப் பார்க்காதவரை .
என் கிறுக்கல்கள்கூட
கவிதையானது
உன்னைப் பார்த்தபின்பு.
கவிதை எழுத
சொல்லித்தருவாயா
என்றாய்!
என்னால் முடியாதென்று
தீர்மானமாய் மறுத்தேன்.
கவிதைக்கே
கவிதை சொல்லித்தரும்
வித்தை நான் இன்னும்
கற்கவில்லையடி !
No comments:
Post a Comment