Sunday, March 20, 2011

நாலு ஏக்கர் (சிறுகதை)

               பண்ணையார்  பரந்தாமனின்     கார் தோட்ட வீட்டின் முன்  வந்து நிற்க, வயலில் வேலை செய்து கொண்டிருந்த வேலையாள் கந்தசாமி ஓடி வந்தான்.
      
காரிலிருந்து இறங்கிய பரந்தாமன், “ என்ன கந்தசாமி செளக்கியமா? பாத்து ரொம்ப நாளாச்சு” என்றார்.


“செளக்கியந்தாங்கய்யா.. நீங்க முன்ன மாதிரி அடிக்கடி தோட்டத்துக்கு வர்றது இல்லங்கிறது தான் பெரிய குறை?"

 "என்ன கந்தசாமி பண்றது ?மொதல்ல விவசாயம் மட்டுந்தான் ,
 அதனால அடிக்கடி வரமுடிஞ்சது .இப்ப ஊர்த்தலைவர் ,கோயில் 
தர்மகர்த்தான்னு நெறைய பொறுப்புகள்ல  இருக்கிறதால  அதிகம்
 இங்க  வரமுடியல . "


"வெயிலுக்கு எதமா எளநி வெட்டி வரட்டுங்களா  எசமான்?"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.வடக்கால இருக்குற நாலு ஏக்கர்
நெலத்துல நடவு வேலை முடிஞ்சுதா கந்தசாமி ?"

"நாலு நாளைக்கு முன்னமே முடிஞ்சுதுங்க அய்யா !"

"அறுவடைவரைக்கும்  இனிமே அது உம்பொறுப்பு .என்னை எதிர்
 பாக்காம மருந்து ,யூரியா ,தண்ணி விடறதுன்னு எல்லா வேலையும் 
கவனமா செய் .ஏன்னா ஆஸ்திரேலியாவுல இருக்கிற எம் மகளைப்  
பாக்க நானும்,என் மனைவியும் போறோம் .வர எப்படியும் மூணு 
மாசமாகும் ."

"ஐயா...நா ஒங்ககிட்ட ஒரு சேதி சொல்லணும் .என்தூரத்து  மாமா 
ஒருத்தர் டவுன்ல ஒரு ஓட்டல் கடை நடத்திகிட்டு இருக்கார் .அங்க 
வியாபாரம் நல்லா நடக்கிறதால உதவிக்கு நம்பிக்கையா ஒரு ஆள் 
வேணும்னு என்னைக் கூப்பிடறார் .அதான்,உங்ககிட்ட சொல்லிட்டு 
இந்த மாசத்தோட நின்னுக்கலாம்னு..." என்று இழுத்தான் கந்தசாமி .

"இத பார் கந்தசாமி ...இந்த நெல் அறுவடைவரைக்கும் இரு .
அப்புறம் நானே  உன்னை சந்தோசமா அனுப்பி வைக்கிறேன். "

"இல்லீங்க ஐயா...அவருக்கு உடனடியா ஆள் தேவையாம்.ஒரு 
வாரத்துக்குள்ள எம்பதில சொல்லச் சொல்லிருக்கார் ."

"இப்படி திடீர்னு நின்னுக்கறேன்னு சொன்னா நா வேற ஆள் உடனே 
தேடறது கஷ்டமில்லியா ?"

"நா வேணா வேற ஆள ஏற்பாடு பண்ணிட்டு கிளம்பட்டுமாய்யா?" 

"அதெல்லாம் சரியா வராது .அறுவடைவரைக்கும் இருந்துட்டு போ "
அதிகாரத் தோரணையில் சொன்னார் பரந்தாமன் .


அதற்குமேல் முதலாளியிடம் எதுவும் பேசமுடியாமல்,"சரிங்கய்யா" 
என்றான் வேண்டாவெறுப்பாய் .

'பத்து வருஷம் விசுவாசமாய் வேலை செஞ்சு என்ன பிரயோஜனம் ?நான் 
இன்னும் முன்னேற ஒரு சந்தர்ப்பம் வரும்போது முதலாளியே முட்டுக்
கட்டை போடலாமா? முதலாளி வர்க்கம்,தொழிலாளி வர்க்கத்தை 
வளரவே விடாது என்பதெல்லாம் உண்மைதானா? முதலாளி மேல் 
கோபம்,கோபமாய் வர அதை விவசாயத்தில் காட்டினான்.நெல் 
வயலுக்கு சரிவர தண்ணீர் விடாமல் மருந்து,உரங்களும் வைக்காமல் 
கடமைக்கு வேலை செய்தான் .அமோகமாய் விளைச்சல் தரவேண்டிய 
பயிர்கள் கிட்டத்தட்ட கருகும் நிலைக்கு வந்து விட்டன .அதைப் பார்த்த 
கந்தசாமிக்கு முதலாளியை பழிவாங்கிவிட்டது  போல் தோன்றியது .

அறுவடைக்கு ஒருவாரம் முன்னதாக ஆஸ்திரேலியாவிலிருந்து 
கந்தசாமிக்கு போன் செய்த பண்ணையார் ,"பத்து வருஷமா எங்கிட்ட 
விசுவாசமா இருந்த உன்னை வெறும் கையோட அனுப்ப மனசில்ல 
எனக்கு .அதான், அறுவடை வரைக்கும் இருக்கச் சொன்னேன் .அந்த நாலு 
ஏக்கர் நெல்லையும் நீயே அறுவடைசெஞ்சு எடுத்துக்கோ .உனக்கு 
இப்படியொரு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும்னுதான் இத்தனை நாளும் 
நான் சைலன்ட்டா இருந்தேன் "என்று சொல்லி முடிப்பதற்குள் ,
சைலன்ட்டாய் மயங்கி விழுந்தான் கந்தசாமி .     
           
            

          
  
                   


                      
        
               

        






                                

No comments:

Post a Comment