Saturday, October 29, 2011

நல்லதை விதை ! (சிறுகதை)

வீட்டுக்குள் நுழைந்த கீதா கணவன் இளமாறனிடம்,"நம்ம பையன் பண்ணின காரியத்தால இன்னிக்கு எம் மானமே போச்சுங்க!"என்று புலம்பினாள்.

"அப்படி என்ன செஞ்சான்?" என்று இளமாறன் கேட்க,

"சென்னையில இருந்து சேலத்துக்கு பஸ்ல வந்துகிட்டிருந்தோம்.கண்டக்டர்
நம்ம பையனுக்கு முழுடிக்கெட் எடுக்கணும்னு சொன்னாரு.இவனுக்கு
12 வயசுதான் ஆகுது.அதனால அரைடிக்கெட் கொடுங்கன்னு கேட்டேன்.
அதுக்குள்ளே இவன் முந்திகிட்டு எனக்கு 13வயசு ஆகுதுன்னு சொல்ல
கண்டக்டர் உட்பட எல்லாரும் என்னை ஒருமாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க
அப்புறம் வேற வழியில்லாம முழுடிக்கெட் எடுத்ததுல 150 ரூபா தெண்டம்.
இவனை கொஞ்சம் கண்டியுங்க " என்று கீதா கூற,

"அம்மா சொல்றதெல்லாம் நிஜமாப்பா?"பையனிடம் இளமாறன் கேட்க,

"ஆமாம்பா,நீங்கதானே பொய் சொல்லக்கூடாது,எப்பவும் உண்மையே
பேசணும்னு சொல்வீங்க.அதத்தான் இன்னிக்கு செஞ்சேன்.நா செஞ்சது
தப்பாப்பா?"என்றான்.

"இல்லப்பா,நீ செஞ்சதுதான் ரொம்பச் சரி.கீப் இட் அப்"என்று மகன்
முதுகில் தட்டிக்கொடுக்க ,

"என்னங்க நீங்க ,அவனை கண்டிப்பீங்கன்னு பாத்தா  முதுகுல தட்டிக்
கொடுக்குறீங்களே!"கீதா கோபிக்க ,

"தப்பு கீதா, தப்பு.இன்னிக்கு இந்த 150  ரூபாய்க்காக அவனை பொய்
சொல்லச் சொன்னா,நமக்கு ஆதாயம் கிடைக்கும்னா பொய் சொல்றது
தப்பில்லைங்கிற எண்ணம் அவன் அடிமனசுல ஆழமா பதிஞ்சுடும்.
இந்த லாபம் பாக்குற புத்திதான் பின்னால லஞ்சம்,ஊழல்கூட 
தனக்காக செஞ்சா தப்பில்லைன்னு நினைக்க வைக்கும்.இந்த வயசுல 
அவன் மனசுங்கறது சீர்படுத்தப்பட்ட அழகான விளைநிலம் மாதிரி.இதுல
நல்லத விதைச்சோம்னா,நல்லதையே அறுவடை செய்யலாம்.அதனால 
தான் அவனை தட்டிக் கொடுத்தேன்"என்று சொன்ன கணவனை 
காதலோடு கட்டிக்கொண்டாள் கீதா.   
   


  


   

No comments:

Post a Comment