டிசம்பர்-11 பாரதியார் பிறந்தநாள்.எத்தனை பேருக்கு இது ஞாபகமிருக்கும்
என்று தெரியவில்லை! நடிகர்களின் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக்
கொள்ளுமளவுக்கு ஒரு மகாகவிஞனின் பிறந்தநாள் தெரியாமல் போனது
வேதனையான விஷயம்.
"காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்! - என்றன்
காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன். "
என்று எமனைப் பார்த்து பாடியவர் வாழ்ந்ததோ 39 வருடங்கள் மட்டுமே.
ஆனால்,அவர் கவிதைகள் 39 யுகங்களை தாண்டியும் நிற்கும்,பேசப்படும்.
முரட்டு மீசை,தலைப்பாகை என்று அவர் முகத்தில் இருக்கும் கம்பீரம்
அவர் கவிதைகளிலும் இருக்கும்.
பாரதி ஒரு தீர்க்கதரிசி.அதனால்தான் நாடு விடுதலையாகும் முன்பே
"ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் "
என்று பாடினார்.
பாரதி ஒரு புதுமை விரும்பி. அதனால்தான் எல்லோரும் தாய்நாடு,
தாய்நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது
"தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே "
என்று பாடினார்.
பாரதி ஒரு பெண் சுதந்திர விரும்பி . அதனால்தான்
"எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி " என்றும்
"கற்பு நிலையென்று சொல்லவந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் "
என்றும் பாடினார்.
"தனியொருவனுக் குணவிலையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் "
என்று பாடிய பாரதியின் வாழ்க்கையில் பெரும்பகுதி பசியும்,வறுமையும்
கலந்தே இருந்தது.
வாழும்காலத்தில் அவரை அங்கீகரிக்கவும்,அரவணைக்கவும் தவறிவிட்டது
தமிழ்ச் சமுதாயம். அந்தக் கோபம் தமிழ்த்தாய்க்கு இன்னும் இருக்கும்
என்பதில் சந்தேகமில்லை.
1 comment:
அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
Post a Comment