Friday, November 4, 2011

நண்பா ! நண்பா ! (சிறுகதை)


"இப்படி ஒரு மலைக்கிராமத்திலா என் நண்பன் நகுலன் ஆசிரியராக
பணிபுரிகிறான்! பள்ளியில் படிக்கும்போதே ஏதாவது சாதிக்கவேண்டும்,
சாதிக்கவேண்டும்  என்று  சதா  சொல்லிக்கொண்டிருப்பானே ! நவீன 
வசதிகளின் சுவடுகள் கொஞ்சம்கூட இல்லாத இந்த ரிமோட் வில்லேஜில்
இருந்து  கொண்டு  என்ன  பெருசாக சாதித்து விடப்போகிறான்? சராசரி  
வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருப்பான் !என்ற எண்ணத்தோடு அவன் 
வீட்டை நெருங்கினேன்.

வீடு பூட்டியிருக்க ,இன்று ஞாயிற்றுக்கிழமை எங்கே போயிருப்பான்?என்ற 
எண்ணத்தோடு பக்கத்து வீட்டிலிருந்த கிழவியிடம் கேட்க ,"ஊரே ஸ்கூல்ல
தாம்பா இருக்கும், அங்க போய்ப்பாரு "என்றாள்.

நான் ஒன்றும் புரியாமல் ஸ்கூல் நோக்கி நடந்தேன்.கிழவி சொன்னது 
உண்மை தான்.ஊர் மக்கள் எல்லோரும் ஸ்கூலில் கூடியிருக்க ,அங்கே
ஒருவர் மேடையில் மருத்துவம் சம்மந்தமான குறிப்புகள் கொடுத்துக் 
கொண்டிருந்தார் .என்ன இங்கே நடக்கிறது என்பதை நான் முழுசாக 
உணர்வதற்குள் என் தோள் மீது ஒரு கை விழ , திரும்பிப்பார்த்தேன் .
நகுலன் நின்று கொண்டிருந்தான் .

"என்ன நகுலா இதெல்லாம் ?"என்றேன்.

"இது மலையில இருக்கிற  குக்கிராமம்டா .அதனால இங்க சேவை
செய்ய எந்த டாக்டரும் ஆர்வம் காட்டுறதில்ல .அதுக்காக நோய் வராம
இருக்குமா என்ன ?காய்ச்சல் ,தலைவலி ,கைகால் வலி, ரத்தக்காயம்  
இதுக்கெல்லாம் செய்ய வேண்டிய முதலுதவி பத்தி மக்களே தெரிஞ்சுக்
கிட்டா,அவசரத்துக்கு அவுங்களே வைத்தியம் செஞ்சுக்கலாமில்ல.அதுக்குத்
தான் என் டாக்டர் நண்பன் ஒருவரை வரவழைச்சு மருத்துவ விளக்கம்
கொடுக்கச் சொன்னேன்.அதோட ரத்ததானம்,கண்தானம் பத்தியும் 
இந்த மக்கள்கிட்ட எடுத்துச் சொல்லி அம்பது பேரை கண்தானம் பண்ணவும்
நிறைய பேரை ரத்ததானம் தரவும் ரெடி பண்ணி வச்சிருக்கோம்.ஏதோ
நம்மால முடிஞ்சது இந்த சமுதாயத்துக்கு! " என்றான்.

"நகுலா,நீ சாதிச்சுக்கிட்டுதான்டா இருக்கே "மனதுக்குள் சொல்லி,சொல்லி
சந்தோசப்பட்டுக்கொண்டேன். 
                       


   
             

1 comment:

துளசி கோபால் said...

அருமை! இனிய பாராட்டுகள்

Post a Comment